கடும் அமளிக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடியதும் தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் ஸ்டாலின் தலைமையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற சட்டப்பேரவை காவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனையடுத்து சட்டப்பேரவையை பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். சபாநாயகர் தனபால் மைக்கை உடைத்து எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை எடப்பாடி பழனிச்சாமி முன்மொழிந்தார்.
பழனிச்சாமி அணியினருக்கு பெரும்பான்மை உள்ளதா என்பதை நிரூபிக்க ரகசிய ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும் என்று திமுக, ஓ.பி.எஸ் அணி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தினர். இதற்கு சபாநாயகர் தனபால் மறுப்பு தெரிவித்தனர். இதனையடுத்து சட்டப்பேரவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. மேலும் சபாநாயகர் தனபாலை முற்றுகையிட்டு திமுக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். வேறொரு நாளில் வாக்கெடுப்பு நடத்த எதிர்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் மக்களிடம் கருத்து கேட்டும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எதிர் கட்சியினர் வலியுறுத்தினர்.
இதனால் சட்டப்பேரவையில் ஒரு மணி நேரமாக கூச்சல் குழப்பம் நிலவியது. கூச்சல், குழப்பத்தால் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்னும் தொடங்கவில்லை. கால அவகாசம் தந்து வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுத்து முழக்கமிட்டனர். மேலும் சட்டப்பேரவையில் நாற்காலிகளை தூக்கி எறிந்து ரகளையில் எதிர்கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். மைக்குகள் பிடுங்கப்பட்டதால் சட்டப்பேரவை போர்க்களமானது. இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சபாநாயகர் பேரவையை விட்டு வெளியேறினார். இதனால் தமிழக சட்டப்பேரவை 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும் மீண்டும் அமளி ஏற்பட்டது. இதனையடுத்து 3 மணி ஒத்திவைப்பதாக சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.