தனியார் வைத்திய கல்லூரி தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் யாவற்றுக்கும், எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் நியாயமான தீர்வை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தற்போது, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன், பிரச்சினைகள் இருப்பின் அவற்றுக்கு தீர்வு பெற்றுக் கொள்ளும் வரை, கல்விக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என, அனைத்து பல்கலைக்கழக மாணவ சங்கங்களிடமும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர் சங்கப் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
மாணவர் சங்கம், பீடாதிபதிகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் பெற்றுக் கொண்ட பின்னர், இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.

