மேலாளரை செருப்பாலடித்த சிவசேனா பாராளுமன்ற உறுப்பினர் விமானங்களில் பயணிக்கத் தடை



எயார் இந்தியா விமானத்தில் பயணம் செய்த சிவசேனா கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர கெய்க்வாட், உயர் வகுப்பில் பயணிக்க வாய்ப்பளிக்காத காரணத்தால், எயார் இந்தியா விமான நிறுவனத்தின் மேலாளரைத் தாக்கியமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விமான நிறுவன மேலாளரை அவர் செருப்பால் அடித்து தாக்கியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், அவர் தன்னுடைய கட்சி தனக்கு துணையாக நிற்கும் எனவும் தைரியமிருந்தால் தன்னை டெல்லி பொலிஸார் கைது செய்யட்டும் என சவால் விடுத்ததாகவும் ஊடக தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ரவீந்திர கெய்க்வாட்டின் செயற்பாட்டை எதிர்க்கட்சிகளும் மக்களும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இவ்விவகாரம் தொடர்பாக இதுவரையில் சிவசேனா கட்சியினர் எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை.
இதனிடையே, ரவீந்திர கெய்க்வாட் விமானங்களில் பயணிப்பதற்குத் தடை விதிக்க விமான நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
அவர் டெல்லியிலிருந்து மீண்டும் புனே பயணிப்பதற்காகப் பெற்றிருந்த விமானச்சீட்டை எயார் இந்தியா நிறுவனம் இரத்து செய்துள்ளது.