தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருப்பதால் பொதுமக்கள் பகல் நேரத்தில் வீடுகளுக்குள் இருக்கும்படி கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்துவருகிறது. இந்த நிலையில் நேற்று இந்த கோடை காலத்திலேயே அதிக அளவுக்கு வெயில் அடித்தது.
மாநிலத்திலேயே அதிக அளவாக வேலூரில் 43.5 சென்டிகிரேட் அளவுக்கு வெயில் அடித்தது. அதற்கு அடுத்தபடியாக சென்னையில் 42.2 டிகிரி வெயில் அடித்தது.
இந்த நிலையில், இன்றும் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என சென்னை வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இயல்புநிலையைவிட அதிக அளவில் வெப்பம் இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மாநில பேரிடர் மேலாண்மை மையம் கேட்டுக்கொண்டிருக்கிறது.
இதையடுத்து, பொதுமக்கள் பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை அவசியமின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டுமென்றும் குடைகளை எடுத்துச்செல்ல வேண்டுமென்றும் கால்நடைகளை நிழலில் வைத்துப் பராமரிக்க வேண்டுமென்றும் அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது.


Post a Comment
Post a Comment