(க.கிஷாந்தன்)
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட டிக்கோயா – சவுத் வனராஜ தோட்ட குடியிருப்பில் 08.04.2017 அன்று இரவு 7.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இரு வீட்டிற்குள் ஏற்பட்ட தீயினால் உபகரணங்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
இந்த வீடுகளில் குடியிருந்த 02 குடும்பங்களை சேர்ந்த 15 பேர் தற்காலிகமாக அயலவர்களின் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தீ ஏற்பட்ட போது வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டதையடுத்து, அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
இதன்போது உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதோடு பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள், உடுத்துணிகள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.
இதேவேளை இது தொடர்பாக அட்டன் பொலிஸ் நிலையத்திற்கு பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிஸார் தீ பரவலுக்கான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.

