-ஏ.எச்.ஏ.ஹுஸைன்-
அம்பாறை இறக்காமத்தில் மூவர் உயிரிழக்க காரணமாகவும் சுமார் 1,000க்கும் மேற்பட்டோர் உபாதைக்குள்ளாகவும் காரணமாக இருந்த கந்தூரி உணவு விவகாரத்துக்கு, எதிர்காலத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அஞ்சல், அஞ்சல் சேவைகள் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் அவ்வமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இவ்வாறான துரதிருஷ்ட வசமான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்வது பொறுப்புள்ள அனைவரினதும் கடமையாகும்.
அந்த வகையில் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள், முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அதிகாரிகள், இவ்வாறான கந்தூரி வைபங்களை நடாத்தும் பள்ளிவாசல்கள் மற்றும் தரீக்காக்களின் நிர்வாகிகள் ஆகியோர் உள்ளடங்கலாக பொறுப்பு வாய்ந்த அனைத்துத் தரப்பினரையும் கலந்துரையாடலில் இணைத்துக் கொண்டு தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படவுள்ளது. தத்தமது நிகழ்வுகளில் பொதுமக்களுக்கு உணவுகள் வழங்கும் போது அந்த உணவின் தரம் குறித்து உறுதிப்படுத்திய பின்னரே அவற்றை வழங்க வேண்டும் என்ற தீர்மானம் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியது.
உணவு வழங்கலுக்கான நடைமுறைச் சாத்திய விதிமுறைகள் அறிமுகப்படுத்தடும். அதற்கான ஏற்பாடுகளில் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சு ஈடுபட்டுள்ளது’. வாங்காமம் கந்தூரி உணவு உட்கொண்ட சம்பவத்தில் சமையல் வேலையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டு விசாரணையின் பின்னர் தலா 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட போதும் பிணை எடுக்க எவரும் முன்வராத காரணத்தினால் அவர்கள் தொடர்ந்து எதிர்வரும் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தமண பகுதி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசாரனைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட இருவரும் அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் சமையல்காரர்கள் , சமையல்க்கு உதவி புரிந்தவர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டவர்கள் இதுவரையில் பொலிஸாரால் விசாரணை செய்யப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

