தாயகம் திரும்பிய 16 இலங்கையர்கள்!



இந்திய முகாம்களில் புலம்பெயர்ந்த இலங்கையர்கள் இன்றைய தினம் நாடு திரும்பியுள்ளனர் என சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய முகாம்களில் புலம்பெயர்ந்த 16 இலங்கையர்களே இவ்வாறு இன்றைய தினம் நாடு திரும்பியுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குறித்த இலங்கையர்களை சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரிகள் வரவேற்றுள்ளனர்.
இதேவேளை,கடந்த இரண்டு வாரங்களாக இந்திய முகாம்களில் புலம்பெயர்ந்த 56 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது புலம்பெயர்ந்தவர்களே இவ்வாறு தற்போது தாயகம் திரும்பி வருகின்றனர்.
நாடு திரும்பும் புலம்பெயர் இலங்கையர்களுக்கான விமானப் பயணச் சீட்டு,மற்றும் உணவு ஆகிய செலவுகளை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பே பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.
இவ்வாறு நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு மீள்குடியேற்ற வசதிகளை சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.