ஒரே கரையோரம் ஒரே பாதை மாநாட்டில் கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள்



ஒரே கரையோரம் ஒரே பாதை என்ற தொனிப் பொருளின் மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதன் முக்கியத்துவம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
‘ஒரே கரையோரம் ஒரே பாதை’ அரச தலைவர்கள் மட்டத்திலான மாநாட்டிற்கு முன்னோடியாக அரச தலைவர்களுடன் இடம்பெற்ற இராப்போசன விருந்துபசாரத்தின்போது பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
29 நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் அரச பிரநிதிகள் கலந்து கொண்ட ‘ஒரே கரையோரம் – ஒரே பாதை’ மாநாடு நேற்று நிறைவு பெற்றது .
இந்த மாநாட்டில் கலந்துரையாடப்பட்ட மூன்று முக்கிய விடங்கள் தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளதாக நேற்று இடம்பெற்ற இராப்போசன நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
புராதன கடல்வழிப் பாதையுடன் தொடர்புடைய நாடுகளில் பாதுகாக்கப்பட்டு வரும் தொல்பொருட்கள் தொடர்பாக டிஜிட்டல் தகவல்களை திரட்டுவதற்கும், பௌத்த கலாசாரத் தொடர்புகளை உறுதிசெய்தல், பிரஜைகளை வலுவூட்டும்போது பெண்கள் மற்றும் இளைய தலைமுறையினர் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துதல் என்பன குறித்து பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களும், ‘ஒரே கரையோரம் – ஒரே பாதை’ பிரயத்தனங்கள் சமாந்திரமான பாதையில் பயணிப்பதாக சீன ஜனாதிபதி ஷி ஜிங் பின் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த பிரயத்தனங்களின்போது, துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துகள் தொடர்பாக இலங்கையின் பங்களிப்புகள் மிகவும் முக்கியமானவை எனவும் சீன ஜனாதிபதி கூறியுள்ளார்.
இலங்கையின் துறைமுக அபிவிருத்திக்காக சீனா உதவிகளை வழங்கும் என்றும் அந்த நாட்டு ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.