இறைவன் மிகப் பெரியவன் (அல்லாஹு அக்பர்)



எண்ணமெல்லாம்
சுற்றிவரச் சிங்கள ஊர்களினால்
சூழப்பட்டிருக்கும் அந்த
ஒற்றை ஒற்றையான
முஸ்லிம் கிராமங்களைப் பற்றியே
சுழல்கிறது...

சிந்தனைகளெல்லாம்
சிங்கள நகரங்களை ஊடறுத்துச் செல்லும்
பஸ் வண்டிகளில்
தொப்பி போட்டுக் கொண்டு
அமர்ந்திருக்கும் அந்த அப்பாவி
முஸ்லிம் மக்களைப் பற்றியதாகவே
இருக்கிறது...

கவலைகளெல்லாம்
பெரும்பான்மைப் பிரதேசங்களில்
வர்த்தக நிலையங்களை நடாத்துகின்ற
நமது
வணிகர்களைப் பற்றியதாகவே
உள்ளது...

கற்பிட்டியிலிருந்தோ, காத்தான்குடியிலிருந்தோ
அட்டாளைச்சேனையிலிருந்தோ, அக்கரைப்பற்றிலிருந்தோ,
மாளிகாவத்தையிலிருந்தோ, மன்னாரிலிருந்தோ
முகநூல்களில் வீறாப்புப் பேசுகின்ற
நமது சோதரர்கள்-
காலி முஸ்லிம்களையும் கொஞ்சம்
கரிசனையோடு
எண்ணிப் பார்க்க வேண்டும்...!

தம்புத்தேகமவில்
தனியாய்த் தவிக்கும்
நமது தாஹிர் நானாவையும்
தயவுகூர்ந்து
யோசிக்க வேண்டும்...!

இரத்தினபுரியின்
இரத்தின வியாபாரி
இப்ராஹீம் காக்காவையும் சிறிது
எண்ணிப்பார்க்க வேண்டும்...

படல்கும்புற ஆஸ்பத்திரிக்குப்
பர்தாவுடன் செல்லும் நமது
பாத்தும்மா, பர்ஸானா சகோதரிகளின்
பாதுகாப்பையும் நாம்
பார்க்க வேண்டும்...

போர்வையில் சிங்களவர் அடித்தால்
போர்வை முஸ்லிம்களினால்
ஒரு போர்வைக்குள்ளாவது
ஒளிந்திட முடியுமா என்பதையும்
கொஞ்சம்
உரசிப் பார்க்க வேண்டும்...

ஆக,
இன முறுகலை ஏற்படுத்தும்
எச்செயலிலும் நாம்
ஈடுபடாதிருப்போம்...

ஆத்திரமூட்டும் வார்த்தைகளை
அறவே
பேசாதிருப்போம்...

உணர்ச்சியூட்டும் சொற்களைத்
தற்போதைக்கு
உபயோகிக்காதிருப்போம்..

வலியச் சென்று வம்புகளை
விலை கொடுத்து
வாங்காதிருப்போம்...

எல்லாச் சமாதானங்களும்
தோற்றுவிடுவதில்லை...
இறைவனிடம் இறைஞ்சுவோம்...!

துஆக்களை விடப் பெரிய
ஆயுதங்களேது இந்த
துன்யாவில்...?

எதுவுமே பலிக்காத போது-
இனியும் பொறுக்க முடியாத போது-
இறுதியில் எழுவோம்
நாம்
எல்லோரும் இணைந்தே...!

அல்லாஹு அக்பர்!