தொழிற்சங்கங்கள் அதிகாரத்தைக் கையிலெடுத்தால் கடுமையாக நடவடிக்கை



பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாட்டாளர்களை பதுளையில் இன்று சந்தித்தார்.
பதுளையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
பதுளை மாவட்டத்தில் முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்ட முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பிலும், அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
பதுளை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பின்வருமாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.
தொழிற்சங்கங்கள் அதிகாரத்தைக் கையிலெடுத்து செயற்படுவதை நாம் எதிர்ப்பது மாத்திரமல்ல, அதற்கு எதிராகக் கடுமையாக நடவடிக்கை எடுப்போம். எங்களை அனுப்பிவிட்டு பொறுப்பெடுப்பதற்கு யார் இருக்கின்றனர்? கடந்த வருடக் கடனை செலுத்த முடியாது என கூறினர். எவ்வாறாயினும், கடனை செலுத்தி IFM அமைப்புடன் கதைத்து, எல்லாவற்றையும் செய்தோம். எதிர்வரும் வருடமும் மஹிந்த ராஜபக்ஸவின் 96 ஆயிரம் கோடி ரூபாவினை செலுத்த வேண்டியுள்ளது. 96 ஆயிரம் கோடி ரூபா கடனை செலுத்த முடியாமையால் தேர்தலை நடத்தினார். நாங்கள் நாளைக்கு சென்றுவிட்டால் யார் இவற்றினை செலுத்தவுள்ளனர்? செய்யக்கூடிய ஒரே சக்தி இங்கிருக்கின்றது. எதிர்வரும் மூன்று வருடங்களில் 1500 கோடி டொலர் வெளிநாட்டுக் கடனை செலுத்த வேண்டியுள்ளது. புதிய கடனாகக் குறைந்த வட்டியில் 150 கோடி டொலர் கடனினை நாங்கள் அண்மையில் பெற்றுக்கொண்டோம். அவர்களால் இதனை செய்ய முடியாது.