ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் அசமந்த போக்காவுள்ளார்



ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் மக்கள் குறைகளை தீர்ப்பதில் அசமந்தப் போக்காக உள்ளதாகவும், மக்களுக்கு கடமை செய்வதற்காகவே அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளனர் என்பதனை பிரதேச சபை செயலாளர் விளங்கிக் கொள்ள வேண்டும் என்று கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார். 

ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத்தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்ற போது மேற்சொன்னவாறு தெரிவித்தார். 

இங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில். 

கடந்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட, மீள் குடியேற்ற பகுதிகளில் உள்ள யானை வேலி மற்றும் குரங்குளின் தொல்லை, பொது மின் விளக்குகள் அமைத்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களில் அதிகமானவற்றை இன்றுவரை ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் நிறைவேற்றவில்லை என்று அறிய முடிகின்றது என்றும் அவருக்கு இங்கு கடமையாற்ற விருப்பமில்லாதவிடத்து வேறு பிரதேசங்களுக்கு கடமையாற்ற செல்வதற்கு தாங்கள் எதிர்ப்பில்லை என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார். 

பிரதேச அபவிருத்திக் குழுக்கூட்டம் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய இடம் பெறும் ஒரு கூட்டமாகும். அக்கூட்டத்திற்கு சமூகமளிக்காத பிரதேச திணைக்களங்களின் தலைவர்கள் தொடர்பாக அவர்களது திணைக்கள தலைவர்களுக்கும் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஜனாதிபதியின் செயலாளருக்கும் எழுத்து மூலம் அறிவிக்குமாறு தெரிவித்தார். 

மட்டக்களப்பு மாவட்டம் கல்வியில் பின்தங்கியுள்ள நிலையில் கல்வி உயர் அதிகாரிகள் இவ்வாறான கூட்டத்திற்கு வருகைதராமல் இருப்பதும் வலய கல்வி அதிகாரிக்கு தெரியாமல் ஆசிரியர்கள் மாகாணத் திணைக்களத்தின் உதவியுடன் இடமாற்றம் பெற்றுச் செல்வதும் கல்வி பின்னடைவுக்கு காரணம் என்றும் தெரிவித்தார்.