வட மாகாண சபையில் தற்போது நிலவும் அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் யாழ். பல்கலைக்கழக அனைத்து பீட மாணவர் ஒன்றியம் தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.
உள்ளூர் மற்றும் சர்வதேச அரங்குகளில் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் துணிச்சலாக வெளிப்படுத்தும் வடக்கு முதல்வரை பதவியில் இருந்து நீக்க எத்தனிக்கும் அரசியல் சக்திகளை வன்மையாகக் கண்டிப்பதாக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் உலக நாடுகளின் சமகால அரசியல் தலைமைகளின் மத்தியில் அரசியல்வாதிகளின் ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக, காத்திரமான முடிவினை துணிகரமாக மேற்கொண்ட முதல்வருக்கு யாழ். பல்கலைக்கழக அனைத்து பீட மாணவர் ஒன்றியம் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.
முதல்வரின் நடவடிக்கையானது தமிழ் அரசியல் போக்கில், ஊழல்கள் செய்ய எத்தனிக்கும் அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டுவதாகவும் தூய்மையான அரசியல் போக்கிற்கான பலமான அத்திவாரமாகவும் அமையும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாகாண முதலமைச்சருக்கு எதிராக செயற்படும் அரசியல்வாதிகள் மற்றும் கட்சிகள் எதிர்காலத்தில் நடைபெறக்கூடிய தேர்தல், அரசியல் செயற்பாடுகளில் தமிழ் மக்களின் நம்பிக்கையை இழப்பதோடு எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் யாழ். பல்கலைக்கழக அனைத்து பீட மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Post a Comment
Post a Comment