பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நான்கு தசாப்த கால அரசியல் வாழ்க்கையின் முக்கியமான சந்தர்ப்பங்களைச் சித்தரிக்கும் புகைப்படக் கண்காட்சி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், இன்று (17) ஆரம்பமாகியது.
“ரணிலின் தூரநோக்கு” எனப் பெயரிடப்பட்டுள்ள இக்கண்காட்சி நாளை முதல் 20 ஆம் திகதி வரை காலை 10.00 மணியிலிருந்து இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும். புகைப்படக் கண்காட்சியை திறந்துவைத்த ஜனாதிபதி அதனைப் பார்வையிட்டார்.
1977 ஆம் ஆண்டில் அப்போதைய இளவயது நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்துக்கு பிரவேசித்த ரணில் விக்கிரமசிங்க, இலங்கை அரசியலில் முக்கியமானதொரு வகிபாகத்தினை வகித்ததுடன், தனது நான்கு தசாப்த கால சவால்மிக்க அரசியல் பயணத்தின் ஊடாக அவர் ஆற்றிய தேசியப் பணியை கௌரவித்தலே இந்தக் கண்காட்சியின் குறிக்கோளாகும்.
பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட பெருந்தொகையான அதிதிகள் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் பங்குபற்றினர்.


Post a Comment
Post a Comment