தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி சிகிச்சைக்காக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சில மணி நேர சிகிச்சைக்குப் பிறகு அவர் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (16) புதன்கிழமையன்று காலை 7.00 மணியளவில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். அவருடைய மனைவி மனைவி ராசாத்தி அம்மாள், மகள் கனிமொழி ஆகியோர் உடன் வந்தனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த ஆண்டின் இறுதியில் உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது கழுத்தில் “ட்ராக்யோஸ்டமி” செய்யப்பட்டு, குழாய் பொறுத்தப்பட்டது. PEG tube எனப்படும் அந்தக் குழாயை மாற்றுவதற்காகவே அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக காவிரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சை முடிந்து சில மணி நேரங்களில் அவர் வீடு திரும்புவார் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“இந்த சிகிச்சை முடிந்த பிறகு, இரண்டு மணி நேரங்களில் வீடுதிரும்புவார்” என மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார்.
முன்னாள் முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு. கருணாநிதிக்கு தற்போது 94 வயதாகிறது.


Post a Comment
Post a Comment