யாழ்ப்பாணத்தில் ஹர்தாலுக்கு மக்கள் ஆதரவில்லை



யாழ்ப்பாண நகரில் மக்கள் கூடும் இடங்களில் யாழ்ப்பாண பெண்கள் அமைப்பினர் மற்றும் தீவக மக்கள் என பெயர் குறிப்பிட்டு ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுவதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. 

இருப்பினும் யாழ்ப்பாண நகரில் மக்கள் வழமைபோன்று தத்தமது கடமைகளில் ஈடுபட்டுவருவதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். 

குறிப்பாக தனியார் மற்றும் அரச பேருந்துகள் சேவையில் ஈடுபட்டுவருகின்றன. 

வர்த்தக நிலையங்கள் வழமைபோன்று இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சனிக்கிழமை தினம் ஆகையால் தனியார் கல்வி நிலையங்கள் வழமை போன்று இயங்குகின்றன. 

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகளை காப்பாற்ற உதவியோருக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க எதிர்வரும் சனிக்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளே அடையாளம் தெரியாத நபர்களினால் யாழ்.நகரின் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டிருந்தன 

இந்த நிலையில் ஒரு சிலர் விடுத்த ஹர்த்தால் அழைப்பிற்கு மக்கள் செவிசாய்க்காது தமது அன்றாட செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். 

எனினும் இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் செயற்படும் மகளிர் அமைப்புக்களிடம் நேற்றையதினம் எமது அத தெரண செய்தியாளர் தொடர்புகொண்டு கேட்டபோது, தாம் இந்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடவில்லை எனவும், தமக்கும் இந்த ஹர்த்தலுக்கும் தொடர்பில்லை எனவும் தெரிவித்திருந்தனர்.