யாழ்ப்பாணம், மணியந்தோட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம், மணியந்தோட்டம், உதயபுரம், கடற்கரைவீதியிலேயே குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை மோட்டர் சைக்கிளொன்றில் வந்த இரு ஆயுததாரிகள் வழிமறித்து துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த 24 வயதுடைய டொன் பொஸ்கோ ரிக்ஷ்மன் என்பவர் வயிற்றுப்பகுதியில் படுகாயமடைந்த நிலையில் யாழ் . வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் இன்று பிற்பகல் 3.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதாகவும் துப்பாக்கிப்பிரயோகம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் யாழ். பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, காயமடைந்தவரின் உறவினர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவரை பார்வையிட வேண்டுமெனக் கோரி வைத்தியசாலை வளாகத்திற்குள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியிலும் பெரும் பதற்றம் நிலவுவதாகவும் யாழ். போதனா வைத்தியசாலையைச் சுற்றி பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.


Post a Comment
Post a Comment