இன்று சர்வதேச சிறுமிகள் தினம்



சிறுமிகளின் உரிமைகள் தொடர்பில் கரிசனைகொள்ளும் சர்வதேச சிறுமிகள் தினம் இன்றாகும்.
சர்வதேச சிறுமிகளுக்கான தினம் 2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டது.
சர்வதேச ரீதியில் பெண் பிள்ளைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பால் சமத்துவத்தைப் பேணவும், பெண் பிள்ளைகளின் கல்வி அறிவுத்திறனை மேம்படுத்தவும் இந்த தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.
போஷாக்கு , சட்ட உரிமை, மருத்துவ வசதி , பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் இளம்வயது திருமண வற்புறுத்தல்கள் தொடர்பில் போதிய விழிப்புணர்வை மேம்படுத்த வேண்டும் என்பதே அடிப்படை நோக்கமாகவும் உள்ளது.
இந்த உலகத்தில் 1.1 பில்லியன் பெண்கள் வசிக்கின்றனர். அவர்களுக்கு தமது வளமான எதிர்காலத்திற்காக சமமான உரிமைகளைப் பெற்று வாழக்கூடிய உரிமையுள்ளது.
சக்தி , வலு மற்றும் படைப்பாற்றலை தம்வசம் கொண்ட பெண் சமூகம் உலகின் எதிர்கால மாற்றத்திற்கும் கட்டியெழுப்புதலுக்கும் பங்காற்றுபவர்கள் என ஐக்கிய நாடுகள் சபை வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
”முரண்பாடுகளின் முன்னரும் பின்னரும் பெண்களின் அதிகாரம்” என்ற தொனிப்பொருளில் இந்த வருட சர்வதேச சிறுமிகளுக்கான தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.