ஓட்டமாவடி வாகன விபத்தில் பெண் பலி



மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் ஓட்டமாவடி பாலத்துக்கு அருகாமையில் இன்று மதியம் 1.15 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளாரென, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
தியாவட்டவான் மையவாடி வீதியில் வசிக்கும் ஆறு பிள்ளைகளின் தயாரான றலீனா (வயது 35) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சுகயீனம் காரணமாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் இருந்து மருந்து பெற்றுக்கொண்டு தனது வசிப்பிடமான தியாவட்டவான் பிரதேசத்தை நோக்கி, கணவருடன் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போதே, இவர் விபத்தக்கு உள்ளாகியுள்ளார்.
 காத்தான்குடியில் இருந்து பொலனறுவைக்கு கொண்டு செல்வதற்கு உமி ஏற்றி வந்த லொறி, பின்னால் வந்து சைக்கிளை மோதியதில் இவ்விபத்துச் சம்பவித்துள்ளது.
சடலம், பிரேத பரிசோதனைக்கான வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என்பதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸ் நிலைய மோட்டார் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.