சுனாமி முன்னெச்சரிக்கை



சுனாமி அனர்தத்தின் போது, மக்களை அனர்த்தத்துக்குத் தயார்படுத்தும் சுனாமி அனர்த்த முன்னெச்சரிக்கை வேலைத்திட்டம், மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (05) பிற்பகல் மேற்கொள்ளப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.முகமட் றியாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த முன்னெச்சரிக்கை வேலைத்திட்டத்தில், இராணுவத்தினர், பொலிஸார், இலங்கை செங்சிலுவைச் சங்கத் தொண்டர்கள், அனர்த்த முன்னாயத்த குழுக்களின் தொண்டர்கள் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் ஏழு முன்னெச்சரிக்கைக் கோபுரங்களும் ஒரே தடவையில் பரீட்சிக்கப்பட்டு, அப்பிரதேசங்களிலுள்ள மக்களையும் அனர்த்தத்துக்குத் தயார்படுத்தும் நோக்குடன் இவ்வேலைத்திடம் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில், கோட்டைக்கல்லாறு, புதுக்குடியிருப்பு, காத்தான்குடி, கல்லடி, களுவன்கேணி, கல்குடா, வாகரை (ஊரியன்கட்டு) ஆகிய பிரதேசங்களில் முன்னெச்சரிக்கைக் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த முன்னெச்சரிக்கை கோபுரங்களில் இன்று பிற்பகல் 2 மணி 8 நிமிடமளவில் அனர்த்த ஒலி எழுப்பப்பட்டது. இதனையடுத்து, அப்பகுதியிலுள்ள மக்கள், ஏற்கெவே வழங்கப்பட்ட அறிவுறுத்தலின் படி, பாடசாலைகளுக்கும் பொது இடங்களுக்கும் விரைவாக இடம்பெயர்ந்தனர்.
இதன்போது, காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலை மண்டபத்தில், இம்மக்களுக்கான விழிப்பூட்டல் இடம்பெற்றது.