(க.கிஷாந்தன்)
2018ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் எங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் எதிரணியின் வாயை அடைக்கும் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இறம்பொட ஸ்ரீ கல்கி மாணவர் சேவா அமைப்பு ஒழுங்கு செய்திருந்த இவ்வருடம் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்கள் கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று இறம்பொட தொண்டமான் கலாசார மண்டபத்தில் 12.11.2017 அன்று தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கொத்மலை மற்றும் உடபலாத்த பிரதேசங்களில் சித்தி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள், பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
இந்த கௌரவிப்பு நிகழ்வில் மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வுக்கு அமைச்சர் மனோ கணேசன், பாரளுமன்ற உறுப்பினர் திலகராஜ், கல்வித்துறையை சேர்ந்தவர்கள், கட்சி உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் பின் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
2018ம் ஆண்டுக்குரிய வரவு செலவு திட்டமானது இந்த நாட்டில் அனைத்து மக்கள் ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்றாக அமையும். இந்த வரவு செலவு திட்டத்தில் மலையகம் வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்வு வாழ மக்கள் தனித்து சொந்த வீடுகளில் வாழும் வாய்ப்பை பெற்றுக்கொடுத்துள்ளது.
சூழலுக்கு ஏற்ப தனிவீடுகள் அமைக்கப்பட்டு சுதந்திரமாக வாழக்கூடிய வசதி இந்த வரவு செலவு திட்டத்தின ஊடாக ஏற்படவுள்ளது.
வரவு செலவு திட்டத்தின் வாத பிரதிவாதங்கள் பாராளுமன்றத்தில் ஒரு மாத காலத்திற்கு இடம்பெறும். இதன்பின் மக்கள் அணைவரும் ஏற்றுக்கொள்ள கூடிய அபிவிருத்தி திட்டங்கள் இவர்களுக்கு கிட்டும். அந்த நிலையில் எங்களை எதிர்த்து பிரச்சாரம் செய்யும் எதிரணியின் வாய் அடைக்கப்படும் என்பதில் ஐயம் இல்லை.
சமீபத்தில் பாராளுமன்றத்திற்கு நடிகர்கள் வருகை தந்தார்கள். அதை மக்கள் அணைவரும் கண்டீர்ப்பார்கள். இந்த நடிகர்கள் தான் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு பாதகமாக செயல்படுபவர்கள். அரசியல் யாப்பு வரக்கூடாது என்பதை தெரிவித்தவர்கள் யார் ? என கேள்வி எழுப்பிய இவர்.
இவர்கள் இந்த நாட்டில் பௌத்த மக்களுக்கு தனி ஒரு இடம் இல்லாமல் போய்விடும் என்பதை வைத்துக்கொண்டே இந்த அரசியல் யாப்பை எதிர்த்து நின்றார்கள். வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல இவர்கள்.
இவர்கள் எடுத்து வைக்கும் பொம்மைகளும் இல்லை நாங்கள். எடுப்பார் கைப்பிள்ளை போல் இருக்க மாட்டோம். முன்னால் ஜனாதிபதி ஜெயவர்த்தனா காலத்தில் இருந்து நிலையான அரசியல் யாப்பு அனைத்து மக்களையும் காப்பாற்ற கூடிய வகையில் அமைந்திராத இந்த சூழ்நிலையில் புதிய அரசியல் யாப்பு அனைத்து மக்களையும் காக்க கூடிய வகையில் அமைந்திருப்பது அனைத்து மக்களாலும் வரவேற்கதக்க கூடியதாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.


Post a Comment
Post a Comment