அக்கரைப்பற்று பிராந்தியத்தில் 2000 ஏக்கர் நெற் காணி பாதிப்பு



அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்த அடை மழை காரணமாக, அக்கரைப்பற்று நீர்ப்பாசனப் பிரிவில் 2,000 ஏக்கர் நெற்காணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்று பிராந்திய நீர்ப்பாசனப் பொறியியலாளர் ரீ. மயூரன் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பிராந்திய நீர்ப்பாசனப் பிரிவிலுள்ள அக்கரைப்பற்று, இலுக்குச்சேனை, வீரையடி, தீகவாபி ஆகிய பிரிவுகளில் மொத்தம் 30 ஆயிரம் ஏக்கரில் நெற்செய்கை பண்ணப்பட்டுள்ள போதிலும், அக்கரைப்பற்று மற்றும் வீரையடிப் பிரதேசங்களிலுள்ள இரண்டாயிரம் ஏக்கர் நெற்காணிகளே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர், இன்று (03) சுட்டிக்காட்டினார்.
நெற்காணிகளில் தேங்கியுள்ள மேலதிக நீர், கடலுக்கு வடிந்தோடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தற்போது மேலதிக நீர் குறைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அக்கரைப்பற்று சின்னமுகத்துவாரம், கோணவத்தை ஆறு என்பனவற்றின் ஊடாக மேலதிக நீர் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் நீர் வடிந்தோடுவதற்கு தடையாய் இருந்த ஆற்று வாழை, சல்வீனியா, புற்பூண்டுகள் கனரக இயந்திரத்தின் உதவியுடன் துப்பரவு செய்யப்பட்டுள்ளனவெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இப்பணிக்கு அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு பிரதேச செயலகங்கள், அக்கரைப்பற்று மாநகர சபை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு பிரதேச சபைகள், விவசாய அமைப்புகளின் நிர்வாகிகள் ஆகியோர் உதவிகளை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.