பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 32 பேர் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக பெப்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
பாதாள குழுவைச் சேர்ந்த சிலர், வேட்பாளர்களாக களமிறங்கவுள்ளதாகவும் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
அம்பாறை, புத்தளம், கேகாலை, களுத்துறை, கொழும்பு, காலி ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறான வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளதாக பெப்ரல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
வழக்குகள் தொடரப்பட்டுள்ள 10 போதைப்பொருள் விற்பனையாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென அவர் கூறியுள்ளார்.
பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடி, குற்றச்செயல்களுடன் தொடர்புடைய வேட்பாளர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாரிய குற்றங்களுடன் தொடர்புடைய பாதாள குழு தலைவர்கள் மூவர், இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளமை தெரியவந்துள்ளதாக பாதுகாப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
வெலிகம மற்றும் கொழும்பு பகுதியில் இந்த வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.


Post a Comment
Post a Comment