தொண்டையில் தொலைபேசியை சொருகி தாயை கொன்ற மகன்




தனது தாயின் தொண்டையில் தொலைபேசியை சொருகி மூச்சுத்திணறலை ஏற்படுத்தி கொலை செய்த சந்தேகத்தில் குறித்த தாயின் மகனை ஊவா பரணகம பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
ஊவாபரணகம –மொரகொல்ல உமான கிராமத்தைச் சேர்ந்த 61 வயதான ரத்னாயக்க முதியன்சலாகே கருணாவதி என்ற தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் தன்னுடைய தாய் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்து கடந்த 16ஆம் திகதி ​பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளார்.
15ஆம் திகதி தானும், தன்னுடைய மனைவியும் வீட்டை விட்டு வெளியே சென்றதாகவும், மறுநாள் காலை  வீட்டுக்கு வந்தபோது தனது தாய் உறங்கிய நிலையிலேயே உயிரிழந்திருப்பதாக சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.
எனினும், குறித்த மரணம் சந்தேகத்திற்கிடமாக உள்ளதாக தெரிவித்து நீதவான் விசாரணைகளை முன்னெடுத்ததாகவும், நீதவானின் உத்தரவுக்கமைய   பிரேத பரிசோதனைகளுக்காக உயிரிழந்த பெண்ணின் உடலம் பதுளை தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பிரேத பரிசோதனைகள் நேற்றைய தினம்(17) நீதிமன்ற விசேட வைத்தியர் முன்னிலையில் நடைபெற்றதுடன், இதன்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு குறித்த தாய் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதற்கமைய, தொலைபேசியை குறித்த தாயின் தொண்டைக்குள் சொருகி மூச்சுத்திணறலை ஏற்படுத்தி கொலை செய்யப்பட்டுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்