புதிய அரசியலமைப்பிற்கான ஆலோசனைகளை வழங்கலாம்



நாட்டின் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஆலோசனைகளை வழங்க பொதுமக்களுக்கு மேலும் சந்தர்ப்பம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கான கால அவகாசம் ஏற்கனவே நிறைவு பெற்றுள்ள நிலையில், மேலும் கால அவகாசம் தேவைப்படுமாயின் அதனை வழங்குவதற்கு தயார் என அரசியலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
25 மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் மக்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டது.
பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் புத்திஜீவிகள் என பலரிடமிருந்து புதிய அரசியலமைப்பிற்கான பரிந்துரைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அரசியலமைப்பு சபை குறிப்பிட்டது.
அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவினால் பாராளுமன்றத்திற்கு இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்த போது தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பிலும் ஆராய்ந்து புதிய அறிக்கை ஒன்றைத் தயாரிக்கவுள்ளதாக அரசியலமைப்பு செயலகத்தின் மேலதிக செயலாளர் யுரேஷா பெர்னாண்டோ தெரிவித்தார்.
அடிப்படை உரிமை, நீதித்துறை, நிதி, தேசிய மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, பொலிஸ் உள்ளிட்ட பல துறைகள் தொடர்பான விடயங்களை உள்ளடக்கிய இடைக்கால அறிக்கை அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டது.
எனினும், இந்த இடைக்கால அறிக்கை தொடர்பில் விவாதமொன்று முன்னெடுக்கப்படவில்லை.
இடைக்கால அறிக்கை தொடர்பில் விவாதத்தை மேற்கொள்வதா, இல்லையா என்பது குறித்து அரசியல் அமைப்பு வழிநடத்தல் குழு கூடித் தீர்மானிக்கவுள்ளது.