அக்கரைப்பற்றிலிருந்து பயணித்த பஸ் புணானையில் விபத்து



#எம்.எம்.அஹமட் அனாம்-
மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் புனானை பிரதேசத்தில் இன்று (03) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 28 பேர் காயமடைந்துள்ளனரென, வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
அக்கரைப்பற்றில் இருந்து பொலன்னறுவை சுங்காவில் பகுதியை நோக்கிப் பயணித்த தனியார் பஸ்ஸும் பொலன்னறுவை பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனமும் புனானை பிரதேசத்தில் வைத்து நேருக்கு நேர் மோதியமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் அறுவர், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 12 பேர், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், ஏனையவர்கள், சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்துத் தொடர்பாக வாழைச்சேனைப் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.