ஹபாயா ஆடை:ஆசிரியைகளுக்கு தற்காலிக இடமாற்றம்



(அப்துல்சலாம் யாசீம்)

சுமூகமான தீர்வு  மத்திய கல்வி அமைச்சினால் வழங்கப்படும் வரைக்கும் சம்பந்தப்பட்ட ஆசிரியைகளுக்கு  தற்காலிக இடமாற்றம் வழங்கப்படும் என கிழக்கு மாகாண மேலதிக கல்வி  பணிப்பாளர் ஏ.விஜயானந்தமூர்த்தி  தெரிவித்தார்.

திருகோணமலை சிறி சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இடம் பெற்ற ஹபாயா விவகாரம் தொடர்பாக  விஷேட கலந்துரையாடலொன்று இன்று (26) வலயக்கல்வி  அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின் போது வலயக்கல்வி பணிப்பாளர் என்.விஜேந்திரன் ,
பிரதி பொலிஸ்மா அதிபர் நிமால் பெரேரா, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கபில கடுபிடிய,திருகோணமலை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி துமிந்த ராஜபக்‌ஷ அகில இலங்கை ஜம்யிய்யதுல் உலமா சபையின் திருகோணமலை நகரக்கிளைத்தலைவர் ஏ.ஆர்.பரீட் மௌலவி , திருகோணமலை பள்ளி வாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.எஸ்.வலீத் ஹாஜியார்,என்.சீ.ரோட் பள்ளி தலைவர் எம்.வை.இல்யாஸ்,  நகர சபை உறுப்பினரான மௌசூன் மாஸ்டர்,பிரதேச சபை உறுப்பினர் துவான் வஹார்தீன்,திடிர் மரண விசாரணை அதிகாரி ரூமி  மற்றும் சிறி சன்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபர்,ஆசிரியர்கள்,பழைய மாணவர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.

இக்கலந்துறையாடலின் போது ஒவ்வொரு மதத்துடைய கலாச்சார விழுமியங்களை மதித்து புரிந்துணர்வுடன்  ஒற்றுமையாக வாழ  வேண்டுமெனவும் சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமை தொடர்பாக நாம் கரிகனையுடன் வாழ வேண்டுமெனவும் பேசப்பட்டது.

அத்துடன்  முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல என வௌிக்காட்டியதுடன் பாடசாலையின் சமய கலாச்சாரம் பேணப்பட வே்ண்டுமென தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் பாடசாலை சார்பாக கலந்து கொண்டவர்கள் குறிப்பிட்டனர்.

இதேவேளை ஆசிரியர்கள் பாடசாலைக்கு பொறுத்தமான பாடசாலையினால்  தீர்மானிக்கப்பட்ட உடைகளை அணிய வேண்டும் என்பதை தாம் வலியுறுத்துவதாகவும் அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.