பிரதமர் ரணில், பொகவந்தலாவயில்




(க.கிஷாந்தன்)
நுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவ பிரதேசத்தை உல்லாச பயணிகள் பிரதேசமாக மாற்றியமைப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக பொகவந்தலாவ டின்சின் தோட்டத்தில் “குழிப்பந்தாட்டம் கோல்ப் மைதானம் ஒன்றையும், உல்லாச விடுதிகளையும் அமைப்பதற்காக இடங்களை பார்வையிட நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க 17.04.2018 அன்று காலை பொகவந்தலாவைக்கு விஜயத்தை மேற்கொண்டார்.
இதன்போது நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற கே.கே.பியதாஸ, அட்டன் டிக்கோயா நகர சபையின் பிரதி தலைவர் ஏ.எம்.பாமிஸ் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் வருகை தந்திருந்தனர்.
கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல் காலத்தின் பொழுது அட்டனுக்கு தேர்தல் பிரச்சார நடவடிக்கைகாக அட்டனுக்கு வருகை தந்திருந்த பிரதமர் நுவரெலியா மாவட்டத்தில் சில பகுதிகளை வெளிநாட்டு உல்லாச பயணிகள் விரும்பதக்க பிரதேசங்களாக மாற்றியமைக்க போவதாக தெரிவித்திருந்தார்.
இதற்கமைவாக பொகவந்தலாவ பிரதேசத்தை உல்லாச பயணிகள் விரும்பதக்க பிரதேசமாக மாற்றியமைக்கும் நடவடிக்கையை 17.04.2018 அன்று பிரதமரால் முன்னெடுக்கப்பட்டது.
இந்தவகையில் பொகவந்தலாவ டின்சின் தோட்டத்திற்கு விசேடமாக வருகை தந்த பிரதமர் அத்தோட்டத்தில் கோல்ப் மைதானம் ஒன்றையும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உல்லாச பயணிகள் தங்கிருந்து பார்வையிடுவதற்கான உல்லாச விடுதிகளையும் அமைப்பதற்கான இடங்களை பார்வையிட்டார்.
அதேவேளை பொகவந்தலாவ பிரதேசத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்றுக்கும் விஜயத்தை மேற்கொண்டார்.
வெகுவிரைவில் இப்பகுதி உல்லாச பயணிகள் அதிகமாக வருகை தரும் பிரதேசமாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.