தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் தடையை மீறி போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒரு பெண் உள்பட ஒன்பது பேர் பலியாகியுள்ளதாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அலுவலர் சிலாஸ் ஜெயமணி தெரிவித்துள்ளார். எனினும், அவர்கள் இறப்புக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

சுமார் 40 போராட்டக்காரர்கள் காயமடைந்துள்ளதாகவும், தூத்துக்குடி அரசு மருத்துவமனையின் அவசர ஊர்தி ஒன்றுக்கு தீவைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் மோசமான நிலையில் இருப்பவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ஆலைக்கு மிக அருகில் உள்ள அ.குமரெட்டியபுரம் மக்கள் நடத்திவரும் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ள நிலையில், இன்று போரட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

மக்கள் அறிவித்துள்ள போராட்டங்களின் காரணமாக, தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம், சிப்காட் காவல் நிலையப் பகுதிகளில் நேற்று (21-ம் தேதி) இரவு பத்து மணி முதல் நாளை (23-ம் தேதி) காலை 8 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

- ஸ்டெர்லைட் ஆலை : மக்கள் போராடுவது ஏன்? - 5 முக்கிய கேள்விகள்
- ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கனடாவில் -7 டிகிரி குளிரில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
- ஸ்டெர்லைட்: ''போராட்டத்தின் பின்னணியில் உள்நோக்கங்கள் உள்ளன'' #GroundReport

தூத்துக்குடி சிப்காட்டில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுப்படுவதாகவும், நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும், மேலும் இந்த கழிவுகளால் புற்றுநோய் வரக்கூடும் கூறி அ.குமரெட்டியபுரம் கிராம மக்களுக்கு கடந்த 99 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Post a Comment
Post a Comment