மத்திய மாகாணத்தில் கணித பாடத்தில் பாடசாலைகள் பின்னடைவு



(க.கிஷாந்தன்)
மத்திய மாகாணத்தில் கடந்த காலங்களில் கணித பாடத்தில் மாத்திரம் சுமார் 92 பாடசாலைகள் பின்னடைந்துள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். மாணவர்களின் சூழல், காலநிலை, பொருளாதாரம், சுகாதாரம் போன்ற பல்வேறு விடயங்கள் காணப்படலாம்.
ஆனால் மாணவர்கள் சித்தியடையாவிட்டால் பெற்றோர்கள், அதிபர்களையும் ஆசிரியர்களையும் தான் குறை கூறுவார்கள். எனவே நாங்கள் அனைத்து மாணவர்களையும் சித்திபெற செய்ய வேண்டும் என்பதற்காக அனைவருக்கும் கணிதம் என்ற செயல் திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றோம். இந்த திட்டத்தின் மூலம் அதிகமான மாணவர்களை சித்தி பெற செய்ய முடியும். இதற்காகவே முதற்கட்டமாக நாங்கள் மத்திய மாகாணத்தில் செயலமர்வுகளை நடத்தி வருகின்றோம் என கல்வி இராஜங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மலையக பாடசாலைகளில் கணித பாட அடைவுமட்டத்தில் பாரிய பின்னடைவை நோக்கியுள்ள பாடசாலைகளில் “அனைவருக்கும் கணிதம்” வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக மத்திய மாகாணத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட 92 பாடசாலைகளின் அதிபர்களுக்கான கருத்தரங்கு ஒன்று 01.06.2018 அன்று கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தலைமையில் அட்டன் சீடா மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த வருடத்தை விட இவ்வருடம் கணிதப்பெறுபேறு தேசிய ரீதியில் அதிகரித்துள்ள வேளையிலும் தோட்டப்புற பாடசாலைகளில் அல்லது தோட்டப்புற மாணவர்களை அதிகமாக கொண்ட பாடசாலைகளில் கணித பாடத்தின் அடைவுமட்டமானது தேசிய மட்டத்தை விட மிக குறைவாகவே காணப்படுகின்றமை கண்டறியபட்டள்ளது.
இந் நிலமை மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணத்தை அடிப்படையாக கொண்ட மாவட்டங்களிலேயே அதிகமாக காணப்படுகின்றது.
இதனை மாற்றுவதற்கும் கணித பெறுபேற்றினை மலையகத்தில் அதிகரிப்பதற்கும் கல்வி இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் “அனைவருக்கும் கணிதம்” எனும் அடிப்படையில் துரித வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்..
இதனடிப்படையில் முதற்கட்டமாக 01.06.2018 அன்று கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தலைமையில் மத்திய மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 92 பாடசாலைகளின் அதிபர்களுக்கான கருத்தரங்கு  ஒன்று மேற்கொள்ளப்பட்டது என்றார்.
இதில் கல்வி அமைச்சின் கணித பிரிவின் கல்வி பணிப்பாளர், கணித பிரிவின் பிரதி மற்றும் உதவி கல்வி பணிப்பளார்கள், தோட்ட பாடசாலைகள் பிரிவின் கல்வி பணிப்பாளர், தேசிய கல்வி நிறுவனத்தின் கணித பிரிவின் பணிப்பளார், சிரேஷ்ட விரிவுரையாளர், மத்திய மாகாணத்தின் 92 பாடசாலைகளின் அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


இதன் போது பாடசலைகளுக்கு விசேட கணித பாட வழிகாட்டி நூல் ஒன்றும் வழங்கப்பட்டன