நாடு முழுவதும் 50 - 60 கிலோ மீற்றர் வேகத்தில்,காற்று




நாட்டிலும் சூழவுள்ள கடற்பரப்பிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுவதுடன் அடுத்த சில நாட்களுக்கும் தொடரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. 

ஏனைய பிரதேசங்களில் சிறிய அளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

நாடு முழுவதும், அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 - 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது. 

இதேவேளை, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பில் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுவதுடன் அடுத்த சில நாட்களுக்கும் தொடரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் பல தடவைகள் சிறியளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30 – 40 கிலோ மீற்றர் வரை காணப்படும். 

நீர்கொழும்பில் இருந்து புத்தளம், காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான மற்றும் ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 - 65 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் அக் கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். 

ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும். 

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயத்தில் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டளவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. 

(வளிமண்டளவியல் திணைக்களம்)