திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவிலுள்ள பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் இன்று (29) காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கத்திக்குத்துக்கு இலக்கானவர் தம்பலகாமம் ,புதுக்குடியிருப்பு பகுதியைச்சேர்ந்த கணபதிப்பிள்ளை காளிராஷா (54வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது உயிரிழந்தவரின் மனைவியின் சகோதரரும் உயிரிழந்தவரும் ஒன்றாக மது அருந்தியதாகவும் அவ்வேளை காணி தொடர்பாக பேசிக்கொண்டிருந்த போது வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாகவும் அதனையடுத்து மனைவியின் சகோதரர் கத்தியால் குத்தியதாகவும் பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சட்ட வைத்திய பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
கத்தியால் குத்திய சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும் கந்தளாய் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.


Post a Comment
Post a Comment