மஹமாறு பகுதியில் கத்திக்குத்து



(அப்துல்சலாம் யாசீம் )

கிண்ணியா மஹமாறு பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நேற்றிரவு (23) ஜந்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் கிண்ணியா  மஹமாறு பகுதியைச்சேர்ந்த முகம்மட் ஹனீபா இப்றாஹீம்( 32வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது புனித ஹஜ்ஜூப்பெருநாள் தினத்தன்று பள்ளி வாயலுக்கு சென்று தொழுகையை நிறைவேற்றி விட்டு  நண்பர்கள் சிலருடன் மஹமாறு மையவாடிக்கருகிலுள்ள வயல் வெட்டைக்கு சென்றோம். 

அங்கு சென்று பியர் அருந்திக்கொண்டிருக்கும் போது  சிறிய மழை பெய்தது. நாங்கள் இருந்த இடத்திற்கு அருகிலுள்ள வயலுக்குள் சிறிய குடிசையொன்று காணப்பட்டது. அவ்வேளை அக்குடிசையில்  எங்களுடைய சக நண்பர்கள் சாராயம் குடித்துக்கொண்டிருந்தார்கள்.

இதேவேளை பியர் குடித்தததையடுத்து மற்றைய குடிசையில் குடித்துக்கொண்டிருந்தவர்களிடம் சாராயம் கேட்டதையடுத்து இரண்டு பேர்களுக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதன் பிறகு நாங்களும் வாக்குவாதப்பட்டோம். பின்னர்  கைகலப்பாக மாறியது. இதேநேரம் இவருக்கு கத்தியால் குத்தியதாகவும்  அவர் வீழ்ந்து கிடந்தது வெறியில் என நினைத்து தொடர்ந்தும் நாங்கள் மது அருந்தியதாகவும்  கைது செய்யப்பட்ட நபரொருவர் பொலிஸாருக்கு வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் இன்றைய தினம் திருகோணமலை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய நிபுணர் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளதாகவும் அதன் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட ஜந்து சந்தேக நபர்களையும் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் குறிப்பிட்டனர்.