போலி மருந்து விநியோகஸ்தர்களை சுற்றிவளைக்க நடவடிக்கை



போலி மருந்துகளை இறக்குமதி மற்றும் விநியோகம் செய்வோருக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது. 

மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை, உணவு மருந்துகள் பரிசோதகர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து போலி மருந்துகளை விநியோகம் செய்வோரை சுற்றிவளைக்க உள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அணில் ஜாசிங்க கூறியுள்ளார். 

இந்த சுற்றிவளைப்புக்களின் போது போலி மருந்துகளை கைப்பற்ற உள்ளதாகவும், சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார். 

இதேவேளை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்குகின்ற போலி வைத்தியர்கள் சம்பந்தமாகவும் சுகாதார அமைச்சுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அணில் ஜாசிங்க கூறியுள்ளார். 

அனைத்து தனியார் வைத்தியர்களும் தனியார் வைத்திய நிலையங்களை வைத்திய ஒழுங்குமுறை அதிகாரசபையில் பதிய வேண்டும் என்று கூறியுள்ளார்.