தரையிறங்கியது விமானம்,தண்ணீரில்




இந்தோனீஷியாவுக்கு அருகிலுள்ள மைக்ரோனீசியா நாட்டின் சர்வதேச விமான நிலைத்தில் ஓடுபாதையை தாண்டி சென்ற விமானமொன்று அருகிலுள்ள கடற் காயல் நீர்ப்பரப்பில் (lagoon)தரை இறங்கியது.
பப்புவா நியூகினியாவை சேர்ந்த ஏர் நியூகினி என்ற விமான நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானம் காயல் பரப்பில் தரையிறங்கியது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த விமானத்திலிருந்த 35 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் என அனைவரும் எவ்வித தீவிர காயமும் இன்றி உயிர் தப்பினர். இந்த விபத்திற்கான காரணம் குறித்த தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. மேலும், விபத்து குறித்த விசாரணை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"விமான நிலைய ஓடுபாதையிலிருந்து சுமார் 480 அடிகள் தொலைவிலுள்ள நீர்ப்பரப்பில் விமானம் புகுந்தது" என்று பிபிசியிடம் பேசிய சுக் சர்வதேச விமான நிலையத்தின் மேலாளர் ஜிம்மி எமிலியோ கூறினார்.
ஓடுபாதையை தாண்டி நீர்ப்பரப்பில் தரையிறங்கிய விமானம் - பயணிகள் பத்திரமாக மீட்புபடத்தின் காப்புரிமைREUTERS
"என்ன நடந்தது என்பது குறித்து தற்போதைக்கு தெரியவில்லை. விமானம் விபத்துக்குள்ளானது குறித்த விசாரணைகள் நாளை தொடங்கும். இந்நிலையில், விமான நிலையத்தின் செயல்பாடு மீண்டும் சீரடைந்துள்ளது" என்று அவர் மேலும் கூறினார்.
விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டவுடன், பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும், சில பயணிகளுக்கு "சிறியளவிலான காயங்கள்" ஏற்பட்டிருக்கலாம் என்று தான் நம்புவதாகவும் எமிலியோ கூறினார்.
மைக்ரோனீஷியாவின் ஃபோன்பெய் என்ற பகுதிலிருந்து பப்புவா நியூகினியாவின் தலைநகரான போர்ட் மொரேஸ்பேவை நோக்கி புறப்பட்ட இந்த விமானத்தை இடையில் மைக்ரோனீஷியாவிலுள்ள வெனோ தீவில் தரையிறக்கும்போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.