மெக்ஸிகோவில், கடந்த 16ஆம் திகதியன்று நடைபெற்ற மெக்ஸிகோ தேசிய தினத்தில் பங்கேற்பதற்காக, அரசாங்கத்தின் பிரதிநிதியாக, கடந்த 10ஆம் திகதியன்று, அங்கு பயணித்த, பாதுகாப்புப் பணியாளர்களின் பிரதானியான, கடற்படை முன்னாள் தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர விஜேகுணரத்ன, நேற்று (19) அதிகாலை 1:45க்கு நாடு திரும்பினார்.
டோஹா, கட்டாரிலிருந்து வருகைதந்த, கட்டார் விமான சேவைக்குச் சொந்தமான, ஆர்-668 என்ற விமானத்தின் ஊடாக, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை, அவர் வந்தடைந்தார்.
கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில், 2007ஆம் ஆண்டு, 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமலாக்கப்பட்ட விவகாரம் தொடர்பிலான வழக்கில், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த “நேவி சம்பத்” என்றழைக்கப்படும், கடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் பிரசாத் சந்தன ஹெட்டி ஆராச்சி என்பவர், மறைந்திருப்பதற்கு உதவி ஒத்தாசை புரிந்தாரென, வைஸ் அட்மிரல் ரவிந்திர விஜேகுணரத்னவுக்கு எதிராகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், வைஸ் அட்மிரல் ரவிந்திர விஜேகுணரத்ன, நாடு திரும்பியதும், அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுமென, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள், கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.
இதேவேளை, கடந்த 13ஆம் திகதியன்று விசேட அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இராணுவத்தின் உயரதிகாரிகளுக்கு எதிராக, நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படாத நிலையில், அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதைக் கடுமையான விமர்சனத்துக்கு உட்படுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment