மின் ஒழுக்கினால் வீடு முற்றாக எரிந்து நாசம்





வாகரை – அம்பந்தனாவெளி எனும் கிராமத்திலுள்ள வீடொன்று மின்னொழுக்கினால் தீப்பற்றிய நிலையில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பிரதேச அனர்த்த நிவாரண சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜே.புவிதரன் தெரிவித்தார். 

கணபதிப்பிள்ளை நாகரெத்தினம் என்பவரின் வீடே இவ்வாறு எரிந்து நாசமாகியுள்ளது. 

பாதிக்கப்பட்ட குடும்பத்தவருக்கு வாகரைப் பிரதேச செயலாளர் எஸ்.ஹரனின் ஆலோசனைக்கமைவாக உடனடியாகவே வேர்ள்ட் விஷன் தன்னார்வ நிறுவனத்தின் அனுசரணையுடன் பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவு நிவாரணம் இன்று வழங்கப்பட்டதாகவும் ஜே.புவிதரன் மேலும் தெரிவித்தார். 

கணவன், மனைவி மற்றும் பிள்ளைகள் எவரும் வீட்டிலில்லாத சமயம் இந்த மின்னொழுக்கு ஏற்பட்டுள்ளது. 

வீடு தீப்பற்றிக் கொண்டதை அடுத்து அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்த போதும் தீயை அணைக்க முடியாமற்போய் வீட்டிலுள்ள அத்தனை உடமைகளும் எரிந்து நாசமாகியுள்ளன. 

இச்சம்பவம் பற்றி தம்மிடம் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய தாம் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர். 

(மட்டக்களப்பு நிருபர் குகதர்ஷன்)