'விடுதலைப் புலிகளுடன்தான் எனக்கு முரண்பாடு, தமிழர்களுடன் இல்லை'




இலங்கை உள்நாட்டுப் போரின்போது இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் இரு தரப்பினரும் உண்மையை பேசி, கவலையை வெளியிட்டு, மன்னிப்பை கோரி முன்னோக்கி செல்ல வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலொன்றின் போதே, பிரதமர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
உள்நாட்டுப் போரின்போது, தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ராணுவத்தினர் என இரண்டு தரப்பிலும் குற்றங்கள் இழைக்கப்பட்டதாக பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு குற்றம் இழைத்தவர்கள் தொடர்பில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும், சாட்சியங்களின் பிரகாரம் அந்த வழக்கு விசாரணைகள் முன்னோக்கி கொண்டு செல்லப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2015ஆம் ஆண்டுக்கு முன்னர் ஆட்சியிலிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமே, உள்நாட்டுப் போரின்போது குற்றம் இழைத்தவர்கள் மீது வழக்குகளை தொடர்ந்திருந்ததாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை
இதன்படி, சாட்சியங்கள் காணப்படுகின்ற வழக்குகள் முன்னோக்கி கொண்டு செல்லப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட்டுள்ள பின்னணியில், இவ்வாறு தொடர்ச்சியாக முன்னோக்கி செல்ல முடியாது என கூறிய பிரதமர், இரு தரப்பினரும் உண்மையை பேசி, கவலையை வெளியிட்டு, மன்னிப்பை கோரி முன்னோக்கி செல்லும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionரணில் விக்ரமசிங்க
இதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தினால் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலர் உயிரிழந்ததாகவும், அவர்கள் உயிரிழந்தமையினாலேயே தான் கட்சியின் தலைமைத்துவத்திற்கு வந்ததாகவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.
தனக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும், மாத்திரமே முரண்பாடுகள் காணப்பட்டதாகவும், தனக்கும், தமிழர்களுக்கும் இடையில் எந்தவித முரண்பாடுகளும் கிடையாது எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.