முச்சக்கர வண்டி விபத்து




(க.கிஷாந்தன்)

நுவரெலியாவிலிருந்து காலி பகுதியில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு  சென்ற முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

நுவரெலியா - அட்டன் பிரதான வீதியில் கொட்டகலை பொரஸ்கிறிக் பகுதியில் குறித்த முச்சக்கரவண்டி மண்மேட்டில் மோதுண்டு பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

15.04.2019 அன்று காலை 7 மணியளவில் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக திம்புள்ள பத்தனை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டதன் காரணமாக முச்சக்கரவண்டியினை கட்டுப்படுத்த முடியாததனால் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

முச்சக்கரவண்டியில் சாரதியும், அவரின் மனைவி மற்றும் இரண்டு சிறு பிள்ளைகளும் பயணித்துள்ளதாகவும், நான்கு பேரும் காயங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வீதி விபத்துகள் அதிகரித்துள்ளதன் காரணமாக வாகனங்களை வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செலுத்த வேண்டும் என பொலிஸார் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.