ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் போன்ற பொருள்களை வாங்கும்படி பெற்றோரை பள்ளி நிர்வாகங்கள் வற்புறுத்தக் கூடாது


சென்னை உயர்நீதிமன்றம்.
ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் போன்ற பொருள்களை வாங்கும்படி பெற்றோரை பள்ளி நிர்வாகங்கள் வற்புறுத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கோடைவிடுமுறை காலாவதியாக இன்னும் ஏறக்குறைய 10 நாள்களே உள்ளன. பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைப் புதிதாகச் சேர்க்க உள்ள பெற்றோர்கள் விண்ணப்ப படிவங்கள் வாங்கவும் சிபாரிசுகளுக்காவும் அலைந்துக்கொண்டிருக்கின்றனர். அப்படித் தனியார் பள்ளிகளில் சேர்க்க ஏராளமான பணத்தை வாரி இறைக்க வேண்டியுள்ளது. இது தவிர்த்து மாணவர்களுக்குப் புத்தகம், பை, சீருடைகள், காலணிகள் என ஏராளமான செலவுகள் அடுக்கடுக்காய் துரத்திக்கொண்டேயிருக்கின்றன. இதனால் ஒரு கட்டத்துக்கு மேல் பெற்றோர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். தனியார் பள்ளி நிர்வாகமே புத்தகம் உள்ளிட்டவற்றை அதிக விலைக்கு விற்பதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. அப்படியொரு புகார்தான் சென்னை உயர் நீதிமன்றத்துக்கும் வந்தது.



பள்ளிக்குழந்தைகள்


கோவையில் உள்ள மாதா அமிர்தானந்த மயி அறக்கட்டளைக்குச் சொந்தமான பள்ளி நிர்வாகம், பாடப் புத்தகங்களுக்கு 5,000 ரூபாயும், சீருடைகள், காலணிகள், புத்தக பை, மதிய உணவு எடுத்துச் செல்வதற்கான பைகளுக்கு 5,000 ரூபாயும் செலுத்தக்கூறி சுற்றறிக்கை வெளியிட்டது. இதை எதிர்த்து மாணவர்களின் பெற்றோர் ஹேமலதா உள்ளிட்ட இருவர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தபோது, `தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பரிந்துரைத்த 450 ரூபாய் விலை கொண்ட புத்தகங்களுக்குப் பதிலாக 5,000 ரூபாய் விலையுடைய ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் புத்தகங்களை பள்ளி நிர்வாகங்கள் வழங்குவதால், நடுத்தர பெற்றோர் பாதிக்கப்படுகின்றனர்’ என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதி, மாணவர்களுக்குத் தேவையான பாடப் புத்தகங்கள், சீருடைகள், காலணிகளை விற்கலாம்... ஆனால், பிற பொருள்களை வாங்கும்படி பெற்றோரை நிர்பந்திக்கக் கூடாது என உத்தரவிட்டார். பின்னர், இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 10-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.