(க.கிஷாந்தன்)
தலவாக்கலை – ஒலிரூட் தோட்டத்தில் 29.05.2019 (புதன்கிழமை) இரவு 10.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 24 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.
அதுமட்டுமன்றி குறித்த தீ விபத்து காரணமாக லயன் தொகுதியில் அமைந்திருந்த 24 வீடுகள் சேதமடைந்ததுடன் இந்த வீடுகளில் குடியிருந்த 24 குடும்பங்களை சேர்ந்த 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆண்கள் 51 பேரும், பெண்கள் 49 பேரும், அடங்குகின்றனர்.
வீட்டில் இருந்தவா்கள் கூச்சலிட்டதை அடுத்து அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முற்பட்ட போதும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. அதனையடுத்து தலவாக்கலை பொலிஸார், தலவாக்கலை லிந்துலை நகர சபை தீயணைப்பு படையினர், நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு படையினர், மற்றும் பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் 3 மணித்தியாலயங்களுக்கு பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
எனினும் சில வீடுகளில் இருந்த சில பொருட்களை மாத்திரம் அவர்களால் தீக்கு இரையாகாமல் வெளியில் கொண்டு வர முடிந்துள்ளது.
எனினும், சில வீடுகளில் இருந்த பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளன.
இந்த தீ விபத்தினால் லயன் தொகுதியில் அமைந்திருந்த 24 வீடுகள் சேதமடைந்ததுடன் இந்த வீடுகளில் குடியிருந்த 24 குடும்பங்களை சேர்ந்த 100 பேர் தற்காலிகமாக ஒலிரூட் தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகமும், தலவாக்கலை லிந்துலை நகர சபை ஊடாகவும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் தலவாக்கலை பொலிஸார், நுவரெலியா பொலிஸ் கைரேகை அடையாளப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
Post a Comment
Post a Comment