இலங்கை வன்முறையில் ஒருவர் உயிரிழப்பு; வீடுகள், கடைகளுக்கு தீவைப்பு


BBC
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகளில் புத்தளம் மாவட்டம் நாத்தாண்டியா - கொட்டாரமுல்ல பகுதியைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் நேற்று (திங்கள்கிழமை) இரவு ஊரடங்கு சட்டம் அமலில் இருந்தபோது, முஸ்லிம்களின் வீடுகள், கடைகள் மற்றும் வாகனங்கள் மீது வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தியதோடு, சில இடங்களில் தீ வைத்துமுள்ளனர்.
இந்த நிலையிலேயே வன்முறையாளர்களின் தாக்குதல்கள் காரணமாக, மேற்படி நபர் உயிரிழந்துள்ளார்.
கொட்டாரமுல்லவில் உயிரிழந்த 45 வயதுடைய அமீர் என்பவர் 4 பிள்ளைகளின் தந்தையாவர். தச்சுத் தொழிலாளியான இவரின் வீடு உட்பட, கொட்டாரமுல்ல பகுதியில் சுமார் 25 வீடுகள் நேற்றிரவு தாக்கப்பட்டுள்ளன.
இதன்போதே, அமீர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், சம்பவ இடத்திலேயே அவர் இறந்து விட்டார் என்றும் அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.
இதேவேளை, அங்குள்ள 4 வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.
நாத்தாண்டியா பிரதேச சபை உறுப்பினர் ரிழ்வான் மற்றும் கொட்டாரமுல்ல பள்ளிவாசல் செயலாளர் ஆகியோரின் வீடுகள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அந்த பகுதியைச் சேர்ந்த சயின் அஹமட் பிபிசி க்கு தெரித்தார்.
கொட்டாரமுல்லவில் சுமார் 1700 முஸ்லிம் குடும்பங்கள் உள்ளன.
நேற்றிரவு கொட்டாரமுல்ல பகுதியில் ராணுவத்தினர் கடமையில் இருக்கத்தக்கதாக, அவர்களின் ஆதரவுடனேயே முஸ்லிம்களின் வீடுகள் மீது வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தியதாக, அங்குள்ள சிலர் பிபிசியிடம் கூறினர்.
இலங்கை வன்முறையில் ஒருவர் உயிரிழப்பு; வீடுகள், கடைகளுக்கு தீவைப்பு
இதேவேளை, கொட்டாரமுல்லயிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தும்மோதர பகுதியிலும் இரண்டு பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதோடு, வீடுகளும் தாக்கப்பட்டு, தீவைப்பு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில் கம்பஹா மாவட்டம் மினுவாங்கொட பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான சுமார் 30 கடைகள் தாக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 20 கடைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் அங்குள்ள உள்ளுரா் ஊடகவியலாளர் ஒருவர் பிபிசியிடம் கூறினார்.