காதி நீதிமன்ற தீர்ப்பில் திருப்தி இல்லாவிட்டால் மேன்முறையீடு செய்யலாம்


பயங்கரவாத தாக்குதல் சம்பந்தமாக சாட்சியில்லாது கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம்களை விடுதலை செய்வது சம்பந்தமாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் முஸ்லிம் உறுப்பினர்கள் பிரதமருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். 

நேற்று மாலை அலரு மாளிகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. 

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் உட்பட புதிய திருத்தங்கள் சம்பந்தமாக இதன்போது பேசப்பட்டதாக அவர் கூறினார். 

எந்தவித சாட்சிகளும் இல்லாத நபர்களை விரைவாக விடுதலை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை சட்ட மா அதிபருடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்று அவர் இதன்போது கூறியுள்ளார். 

முஸ்லிம் விவாக சட்டம் தொடர்பில் திருத்தம் செய்யப்பட உள்ளதாகவும், அந்த சட்டத்தில் ஊடகங்களில் தெரிவிக்கப்படுகின்றவாறு பிரச்சினைகள் இல்லை என்றும் அவர் கூறினார். 

பாதிக்கப்பட்ட பெண்கள் காதி நீதிமன்ற தீர்ப்பினால் திருப்தியடையாவிட்டால் அவர்கள் அது தொடர்பில் மேன்முறையீடு செய்ய முடியும் என்றும், காதி நீதிமன்றத்துக்கு குறை கூறுவதால் இதற்கு தீர்வு கிடைக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.