அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 20 பேர் பலி


அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணதிலுள்ள எல் பசோ எனும் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர்; 26 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
"டெக்சாஸின் வரலாற்றில் இது மிகவும் மோசமான தினங்களில் ஒன்று" என்று இந்த தாக்குதல் குறித்து அம்மாகாண ஆளுநர் கிரெக் அபாட் கருத்துத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா - மெக்ஸிகோ எல்லைக்கு அருகே உள்ள 'சியில்லோ விஸ்டா மால்' எனும் வணிக வளாகத்தை ஒட்டியுள்ள வால்மார்ட் கடையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
டெக்சாஸில் துப்பாக்கிச்சூடு: 20 பேர் உயிரிழப்பு; 26 பேர் காயம்படத்தின் காப்புரிமைEPA
இந்த தாக்குதலை நடத்திய ஒரே தாக்குதலாளியாக கருதப்படும் 21 வயதான ஒருவரை காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே கைது செய்துள்ளனர். காவல்துறையினரின் இந்த உடனடி நடவடிக்கைக்கு அம்மாகாண ஆளுநர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிடிபட்டுள்ள துப்பாக்கித்தாரியின் பெயர் பேட்ரிக் கிருசிஸ் என்றும் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திலிருந்து சுமார் 1,046 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள டல்லாஸ் நகரை சேர்ந்தவர் என்றும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
கண்காணிப்பு ஒளிப்பட கருவியில் பதிவான சில புகைப்படங்கள் வெளிவந்துள்ளன. அதில் அடர் நிற மேலாடையை உடுத்தியுள்ள நபர், கையில் துப்பாக்கியுடன் காணப்படுகிறார்.