இடைமனுதாரராக இணைந்துகொள்ள அனுமதி கோரி,மனு




எல்லை நிர்ணய நடவடிக்கைகளை பூர்த்தி செய்யாமல் பழைய முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா என்பதை தெளிவுபடுத்துமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தின் இடைமனுதாரராக இணைந்துகொள்ள அனுமதி கோரி நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் உயர் நீதிமன்றத்தில் இன்று இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். 

எல்லை நிர்ணய அறிக்கை இன்றி, பழைய முறைக்கு அமைய மாகாண சபை தேர்தலை நடத்த ஜனாதிபதிக்கு சட்ட ரீதியாக அதிகாரம் இல்லை என்ற உத்தரவை பிறப்பிக்குமாறு எம்.ஏ. சுமந்திரன் தனது மனுவின் ஊடாக கோரியுள்ளார். 

2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க மாகாணசபை தேர்தல் சட்டத்தின் திருத்தங்களுக்கு அமைய எல்லை நிர்ணய நடவடிக்கைகளை பூர்த்தி செய்ய வேண்டியது அத்தியாவசியம் என சுமந்திரன் தனது மனுவின் மூலம் நீதிமன்றத்தை தெளிவுப்படுத்தியுள்ளார். 

சுமந்திரன் தனது மனுவில், மாகாண சபை தேர்தலை தடைகள் இன்றி நடத்த முடியவில்லையா என்று முடிவு செய்யுமாறு நீதிமன்றத்தை கேட்டுள்ளார். 

ஜனாதிபதியால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விண்ணப்பம், நாளை மறுதினம் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் தலைமையில் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.