கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது


தொலைபேசி அழைப்பால் 1 ½ வயது குழந்தை பரிதாப மரணம்!

நிந்தவூர் 09 ஆம் பிரிவைச் சேர்ந்த முஹம்மட் இல்யாஸ், அமீருல் நிசா தம்பதிகளின் ஒன்றரை வயது ஆண் குழந்தை கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

  நிந்தவூரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் பற்றி மேலும் தெரிவதாவது,

உயிரிழந்த இல்யாஸ் முஹம்மட் ஆதில் (1 ½ வயது) எனும் குழந்தையின் பாட்டன் (தாயாரின் தந்தை) காலை 8.00 மணியளவில் நிந்தவூர் கடற்கரைக்கு அழைத்துச் சென்று அங்கு தரித்திருந்த வேளை, அவரின் கையடக்க  தொலைபேசிக்கு அழைப்பொன்று வந்துள்ளது. அந்த அழைப்பிற்கு பதிலளித்து பேசிக்கொண்டிருந்த வேளை மரணமான இக்குழந்தை கடலால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளது.

குழந்தை பற்றிய விடயத்தில் கரிசனையற்று தொடர்ந்தும் தொலைபேசியில் உரையாடிய பாட்டன், தனது தொலைபேசி உரையாடல் முடிந்த பிறகு குழந்தையைத் தேடியுள்ளார். உடனே தனது வீட்டிற்குச் சென்ற இவர் சம்பவம் பற்றி தனது வீட்டார்களிடம் கூறவே, சம்பவம் நடைபெற்ற இடமான நிந்தவூர் வௌவாலோடை பிரதேசத்திற்கு சென்ற போது அங்கு மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட மீனவர்களால் குறிப்பிட்ட குழந்தை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

மரணமடைந்த குழந்தையின் உடல் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை குறித்த குழந்தையின் தந்தை வெளிநாட்டுக்குச் சென்று 15 நாட்களேயான நிலையிலேயே இந்த துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.