சஜித் தொடர்பில் சம்பந்தன் கருத்து


“புதிய ஜனாதிபதியாக வரவுள்ளவர் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் கண்டே தீரவேண்டும். புதிய அரசமைப்பைக் கொண்டுவருவதன் மூலமே தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வைக்காண முடியும். எனவே, இது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தி உத்தரவாதம் வழங்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
‘ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அந்தக் கட்சியின் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாஸ நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்குமா?’ என்று சம்பந்தனிடம் வினவியபோதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடன் நேரில் பேச்சு நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவுள்ளது. அதேபோல், ஏனைய கட்சிகளின் வேட்பாளர்களுடனும் பேச்சு நடத்தக் கூட்டமைப்பு தயாராக இருக்கின்றது. இந்தப் பேச்சுக்களின்போது எட்டப்படும் தீர்மானங்களை வைத்தே எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது எனக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவும், ஒருங்கிணைப்புக்குழுவும் இறுதி முடிவு எடுக்கும்” – என்றார்.