டிக்கோயா விபத்தில்,31 பேர் காயம்




(க.கிஷாந்தன்)
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோயா  வனராஜா பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 31 பேர்  படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து 08.10.2019 அன்று மாலை 03 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அட்டன் பகுதியிலிருந்து பொகவந்தலாவ பகுதிக்கு பாடசாலை மாணவர்களை ஏற்றிக் கொண்டு பயணித்த  பாடசாலை சேவை பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
எதிரே வந்த வாகனம் ஒன்றுக்கு இடமளிக்கும் போதே குறித்த பஸ் வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததினால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
விபத்தில் பஸ் சாரதி உட்பட 31 பேர் காயமடைந்த நிலையில், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் காயமமைந்தவர்களில் 28 பேர் மாணவ, மாணவிகள் எனவும், 3 பேர் பெரியவர்கள் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
அட்டன் ஹைலன்ஸ் கல்லூரி, ஹைலவல் பாடசாலை, வெப்ஸ்டார் பாடசாலை, பொஸ்கோ பாடசாலை ஆகிய பாடசாலைகளின் மாணவ, மாணவிகளே இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.