லித்தியம் அயன் ரீசார்ஜ் பேட்டரி தந்த பரிசு


ரீசார்ஜ் செய்யக்கூடிய லித்தியம் அயன் பேட்டரிகளை உருவாக்கியதற்காக 96 வயது விஞ்ஞானி ஜான் பி குட் எனாஃப் உட்பட மூவருக்கு 2019-ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்.ஸ்டேன்லி வைட்டிங்காம், அகிரா யோஷினோ ஆகியோர்தான் வேதியியல் நோபல் பரிசைப் பகிர்ந்துகொள்ளப்போகும் மற்ற இருவர்.
ஸ்டாக்ஹோமில் உள்ள ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் கல்வி நிறுவனத்தில் இந்தப் பரிசு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
சுமார் 6.4 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுத் தொகையை இந்த மூவரும் பகிர்ந்துகொள்வர்.

லித்தியம் அயன் பேட்டரிகள் என்பவை என்ன?

மீண்டும் மீண்டும் மின்னேற்றம் செய்யக்கூடிய 'லித்தியம் - அயன் பேட்டரி' என்பது எடை குறைந்த எளிதில் எடுத்துச் செல்லத்தக்க, ஆற்றல் மிக்க பேட்டரி ஆகும். அலைபேசி, லேப்டாப் முதல் எலக்ட்ரானிக் கார்கள் வரையிலான பல தரப்பட்ட மின்னணு சாதனங்களில் பயன்படுத்தப்படுவது இந்த லித்தியம் அயன் ரீசார்ஜபிள் பேட்டரிதான்.
லித்தியம் அயன் பேட்டரி.படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionலித்தியம் அயன் ரீசாஜ் பேட்டரி.
இந்த ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசுக்கு உரியவர்கள் பெயர்களை அறிவித்த பரிசுக்குழு, இந்த லித்தியம் அயன் பேட்டரிகள் ஒரு ரீசார்ஜபிள் உலகத்தையே உருவாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
"நாம் தொடர்பு கொள்ளவும், வேலை செய்யவும், படிக்கவும், இசை கேட்கவும், அறிவைத் தேடவும் பயன்படுகிற எளிதில் கொண்டு செல்லும் மின்னணு சாதனங்களுக்கு ஆற்றல் தருவதற்கு லித்தியம் அயன் மின்கலன்கள் பயன்படுகின்றன" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிக 'நீடித்த நிலைத்த' உலகை உருவாக்க இந்த கண்டுபிடிப்பு உதவியதாக ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் தலைமைச் செயலாளர் கோரன் கே ஹன்சன் தெரிவித்தார்.
மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படுவதைத் தவிர, இந்த பேட்டரிகளைப் பயன்படுத்தி, சூரிய விசை மின்சாரம், காற்றாலை மின்சாரம் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களில் இருந்து வரும் மின்சாரத்தை சேமித்து வைக்கவும் முடியும்.