“நாட்டின் இறையாண்மையை மீறிய எந்த ஒப்பந்தத்தையும் அனுமதிக்க மாட்டேன்”


“நாட்டின் இறையாண்மை எனக்கு முக்கியம். அதை கேள்விக்குறியாக்கும் எந்த ஒப்பந்தத்தையும் யாருடனும் நான் செய்யத் தயாரில்லை”
இவ்வாறு கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனாவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச.தனது கூட்டணித் தலைவர்களுடன் இணைந்து இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர் மேலும் கூறியதாவது ,
படையினர் மட்டுமல்ல அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டு சிறையில் உள்ளோர் தொடர்பிலும் நீதி வழங்கப்படவேண்டுமென நான் கூறினேன். காணாமல் போனவர்கள் தொடர்பில் நாங்கள் ஒரு பொறிமுறைமையை ஏற்படுத்தினோம்.அது தொடர்பில் ஆவணங்கள் உள்ளன.
போரின்போது 13 784 பேர் சரணடைந்தனர். அவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்தி அவர்களுக்கு தொழில்வாய்ப்பை வழங்கினோம். சிலர் சிவில் பாதுகாப்பு படைகளில் சேர்க்கப்பட்டனர். நாங்கள் தடுப்புக்காவலில் வைக்கவில்லை.பல படையினர் காணாமல் போனவர்கள் பட்டியலில் இருக்கின்றனர். போரின்போது காணாமல் போனவர்கள் என்று கருதப்படுவோர் குறித்து விசாரணைகளை நடத்தியுள்ளோம். எங்களை பொறுத்தவரை சரணடைந்த எல்லோரையும் புனர்வாழ்வுக்கு உட்படுத்தியுள்ளோம்.
தோட்டத் தொழிலாளர் நலன் – தோட்ட பகுதி இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பு ,வேலைவாய்ப்பு வடக்கு மாகாண இளைஞர் யுவதிகளுக்கான தொழில்வாய்ப்பு எதிர்காலம் என்பன பற்றி அந்தப்பகுதி தலைவர்களுடன் பேச்சு நடாத்தியுள்ளேன்.
அனைத்து பிரஜைகளும் கௌரவமாக வாழ வேண்டும்.கல்வி , வீடமைப்பு போன்ற அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்பட வேண்டும்.
நான் நாட்டின் இறையாண்மைக்கு எதிரான எந்த ஒப்பந்தத்தையும் செய்யமாட்டேன். ஒப்பந்தங்கள் ஏதும் வந்தால் அதுபற்றி பேசலாம்.நான் ஜனாதிபதியாக வந்தால் அதுபற்றி ஆராய்ந்தே முடிவெடுப்பேன்.