#கைலா மியூலர், பக்தாதி ரெய்டுக்கு அமெரிக்கா பெயர்


அமெரிக்க சிறப்புப் படைகளின் திடீர் ரெய்டை அடுத்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கல் அல் பக்தாதி மரமணமடைந்தார். இந்த ரெய்டுக்கு அமெரிக்கப் படைகள் வைத்த பெயர் `ஆபரேஷன் கைலா மியூலர்' (Operation Kayla Mueller).
பக்தாதி - கைலா மியூலர்
பக்தாதி - கைலா மியூலர்
உலகை அச்சுறுத்திக்கொண்டிருந்த ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் அல் பக்தாதி, அமெரிக்கப் படைகளின் ரெய்டின்போது உயிரிழந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த 27-ம் தேதி அறிவித்தார். அமெரிக்கக் கூட்டுப் படைகள் சுற்றிவளைத்த நிலையில், ஒருவழிப்பாதை மட்டுமே கொண்ட குகையில் பக்தாதி வெடிகுண்டுகளை வெடிக்க வைத்து தற்கொலை செய்துகொண்டதாக ட்ரம்ப் அறிவித்தார்.
கொல்லப்பட்ட முன்னாள் ஐ.எஸ் தலைவர் பக்தாதி
கொல்லப்பட்ட முன்னாள் ஐ.எஸ் தலைவர் பக்தாதி
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரைன், ``அமெரிக்கக் கூட்டுப்படைகளின் தலைவர் ஜெனரல் மார்க் ஏ மைலி, பக்தாதியைக் கொன்ற இந்த ஆபரேஷனுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட கைலா மீயூலரின் நினைவாகப் பெயர் சூட்டினார். மக்கள் இதை நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்'' என்றார்.

யார் இந்த கைலா மியூலர்?

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள பிரெஸ்காட் பகுதியைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் கைலா மியூலர். துருக்கி எல்லைப் பகுதி மற்றும் சிரியா உள்ளிட்ட நாடுகளில் உள்நாட்டுப் போரால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் அங்கு சென்று பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்த கைலா, ஐ.எஸ் தீவிரவாதிகளால் 2013-ம் ஆண்டு கடத்தப்பட்டார். ஏறக்குறைய 2 ஆண்டுகள் தீவிரவாதிகள் பிடியில் பிணையக் கைதியாக இருந்த கைலா, 2015-ம் ஆண்டு கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டபோது அவருக்கு வயது 26.
கைலா மியூலர்
கைலா மியூலர்
AP
மனித உரிமை செயற்பாட்டாளரான கைலா, தனது பணிகளுக்காக இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்குப் பயணித்திருக்கிறார். இதற்காகக் 2010-ம் ஆண்டு அவர் இந்தியா வந்தார். இமாசலப்பிரதேசத்தின் தரம்சாலாவில் தங்கியிருந்த திபெத்திய அகதிகள் மற்றும் வறுமையால் வாடிய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அவர் ஆங்கிலம் கற்பித்தார்.
துருக்கி எல்லையில் சிரிய அகதிகளுக்கு உதவும் நோக்கில் அவர், 2012-ல் துருக்கி சென்றார். டென்மார்க் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த குழுக்களுடன் சேர்ந்து பணியாற்றிய அவர், துருக்கி எல்லையைக் கடந்து சிரியாவுக்குச் சென்றும் அங்குள்ள மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்தார்.
`ரொம்ப சந்தோஷப்படாதீங்க; புதிய `திகில்’ காத்திருக்கு!’ - புதிய தலைவரை அறிவித்தது ஐ.எஸ்

Also Read

`ரொம்ப சந்தோஷப்படாதீங்க; புதிய `திகில்’ காத்திருக்கு!’ - புதிய தலைவரை அறிவித்தது 

ஐ.எஸ் அமைப்பு கடத்தல்

சிரியாவின் அலெப்போ நகரில் எல்லைகள் அற்ற மருத்துவர்கள் அமைப்பு (Doctors without Border) நடத்திவந்த மருத்துவமனைக்கு கைலா, 2013-ம் ஆண்டு ஆகஸ்டில் சென்றார். அங்கு தங்கியிருந்தபோது, ஐ.எஸ் அமைப்பு அவரைக் கடத்தியது. அவரைப் பிணைக் கைதியாக வைத்துக்கொண்டு அமெரிக்காவிடம் பேரம் பேசியது ஐஎஸ் தீவிரவாத அமைப்பு. அவரைப் பிணையக் கைதியாகப் பிடித்து வைத்திருந்தபோது கைலா குறித்த தகவல்கள் வெளியில் வந்தால், அவரைக் கொன்றுவிடுவோம் என்றும் ஐஎஸ் அமைப்பு மிரட்டியது.
கைலா மியூலர்
கைலா மியூலர்
AP
ஆனால், அவர் இறந்ததாக 2015-ம் ஆண்டு அறிவித்தது ஐஎஸ். கைலாவை அடைத்து வைத்திருந்த இடத்தில் ஜோர்டான் படைகள் விமானம் மூலம் நடத்திய தாக்குதலில் அவர் இறந்ததாக அந்த அமைப்பு அறிவித்தது. ஆனால், அந்த இடத்தில் எந்தத் தாக்குதலையும் தங்கள் படைகள் நடத்தவில்லை என்றது ஜோர்டான். கைலா பிடித்து வைக்கப்பட்டிருந்தபோது அவர் குறித்தோ, அவர் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இடம்குறித்தோ எந்தத் தகவல்களும் வெளியாகவில்லை. ஆனால், 2015-ம் ஆண்டு அவர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர், கைலா தனது குடும்பத்தினருக்கு எழுதிய கடிதம் மற்றும் கைலா பிடித்து வைக்கப்பட்டிருந்தபோது அவருடன் அடைத்து வைக்கப்பட்டிருந்த 2 யாசிடி இனப் பெண்களின் வாக்குமூலம் எனப் பல்வேறு தகவல்கள் மூலம் கைலா குறித்து தகவல்களை அமெரிக்கா திரட்டியது. கைலா இறந்ததாக அறிவிக்கப்பட்டாலும் அவரது உடல் இதுவரை கைப்பற்றப்படவில்லை.

ஐ.எஸ் பிடியில் 2 ஆண்டுகள்

யாசிடி இனப் பெண்கள் கொடுத்த வாக்குமூலத்தின்படி கைலாவை பல்வேறு சிறைகளில் மாறிமாறி அடைத்து வைத்திருந்தது தெரியவந்தது. வெளிச்சம் குறைவான அறைகளில் கைலா அடைத்து வைக்கப்பட்டதுடன் குறைவான அளவிலான உணவு மட்டுமே அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், சித்திரவதையைத் தான் அனுபவித்து வருவதாகவும் தனது கையில் இருந்து நகங்களைக் கூட ஐஎஸ் தீவிரவாதிகள் பிடுங்கிவிட்டதாகவும் யாசிடி இனப் பெண் ஒருவரிடம் கைலா கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின.
3 ஆண்டு தேடுதல்.. ஒருவழிப்பாதை குகை.. ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் அல் பக்தாதி கொல்லப்பட்டது எப்படி?

Also Read

3 ஆண்டு தேடுதல்.. ஒருவழிப்பாதை குகை.. ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் அல் பக்தாதி கொல்லப்பட்டது எப்படி?

ஐஎஸ் அமைப்பின் முக்கிய கமாண்டர்களுள் ஒருவராக இருந்த அபு சய்யாஃபின் வீட்டில் கைலா சில மாதங்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார். அப்போது, கைலாவை ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபுபக்கர் பக்தாதி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது. அமெரிக்கா - ஐஎஸ் அமைப்பு இடையில் கைலாவின் விடுதலை குறித்து பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தபோது, அவர் உயிருடன்தான் இருக்கிறார் என்பதை உறுதிசெய்யும் பொருட்டு விடுதலை செய்யப்பட இருந்த பிணையக் கைதிகளிடம் கைலாவைக் காட்டினர். அவர்களில் ஒருவரான டென்மார்க் புகைப்படக் கலைஞர் ரே ஒட்டேசன் கைலா குறித்து பேசுகையில், ``கைலா, மதம் மாறிவிட்டதாகவும் அவர் மிகவும் வலிமையான பெண்மணி என்றும் தீவிரவாதிகள் கூறினர். அதேபோல், கைலா தனது சொந்த விருப்பத்துடனே அங்கு தங்கியிருப்பதாகவும் அவர்கள் எங்களிடம் கூறினார்கள். ஆனால், இவற்றையெல்லாம் கைலா அப்போது மறுத்தார். அவர்கள் முன்னிலையில் அப்படி மறுப்பு தெரிவிக்க எங்களுக்குத் தைரியம் இருக்கும் என்று கூற முடியாது'' என்று என்.பி.சி ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். கைலாவை மீட்கும் விவகாரத்தில் அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா தலைமையிலான நிர்வாகம் முழு முயற்சி செய்யவில்லை என்று அவரின் பெற்றோர்களான கார்ல் மற்றும் மார்ஷா ஆகியோர் குற்றம்சாட்டியிருந்தனர்.
கைலாவால் தங்களுக்கு நவம்பர் 2, 2014-ல் எழுதப்பட்ட கடிதம் என்று கூறி கடிதம் ஒன்றையும் அவரின் பெற்றோர்கள்கள் வெளியிட்டிருந்தனர். அந்தக் கடிதத்தில், ``நான் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன். சொல்லப்போனால் உடல் எடையும் அதிகரித்திருக்கிறது. பாதுகாப்பாகவே இருக்கிறேன்'' என்று கைலா கூறியதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.
மார்ஷா - கார்ல் மியூலர் தம்பதியினர்
மார்ஷா - கார்ல் மியூலர் தம்பதியினர்
American Military News
இந்தநிலையில் பக்தாதி கொல்லப்பட்ட செய்தி தங்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதாகக் கைலாவின் பெற்றோர் தெரிவித்திருக்கிறார்கள். இதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர்கள் கூறியிருக்கிறார்கள். இதுகுறித்துப் பேசிய கைலாவின் தாய் மார்ஷா மியூலர், ``எங்கள் மகள் எங்கே இருக்கிறாள் என்பதை அறிய விரும்புகிறேன். அவளுக்கு உண்மையாகவே என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். உலகில் உள்ள யாரேனும் இந்தக் கேள்விகளுக்கு எங்களுக்கு விடை தரமாட்டார்களா என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டிருக்கிறேன்'' என்றார்.